கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் வெள்ளியன்று சீல் வைத்தனர்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை தானம் என்ற பெயரில் கரு முட்டை விற்பனை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் தாயார், தாயாரின் இரண்டாவது கணவர், இடைத்தரகராக செயல்பட்ட மாலதி என்ற பெண், சிறுமியின் வயதை மறைக்க போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் என்பவர் என 4 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தின் தலைவர் அ.விஸ்வநாதன் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனைகளில் சோதனை நடத்தி, விசாரணையும் செய்தனர்.
மேலும் பெருந்துறை, சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் பகுதி மருத்துவமனைகளில் சிறுமியிடம் கருமுட்டை பெற்று விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணையில் ஈடுபட்டது. இந்த விசாரணை அறிக்கைகள் அனைத்தும் அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதனடிப்படையில் வியாழனன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் 16 வயது சிறுமியிடம் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈரோடு சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை மற்றும் ஓசூர் விஜய் மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர்(பொறுப்பு) ஆர்.பிரேமகுமாரி தலைமையில், குடும்ப நலத் துணை இயக்குநர் என்.என்.ராஜசேகரன், ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், வீரப்பன்சத்திரம் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) நிர்மலா மற்றும் அதிகாரிகள் ஈரோடு சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு வெள்ளியன்று மாலை சீல் வைத்தனர். மொத்தம் 5 ஸ்கேன் கருவிகள் மற்றும் அதற்கான அறைகள் சீல் வைக்கப்பட்டன.
மேலும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை 15 நாள்களில் மாற்று மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இந்த 15 நாள்கள் காலக்கெடு முடிந்த பிறகு, மீண்டும் அதிகாரிகள் குழுவினர் நேரில் வந்து மருத்துவமனைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.