districts

img

தமிழகத்தை உலுக்கிய அரியலூர் சிறுமி கும்பல் பாலியல் வன்கொலை வழக்கு

அரியலூர், ஏப். 12 - தமிழகத்தை உலுக்கிய அரியலூர் சிறுமி கடத்தப்பட்டு கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளுக்கு மொத்தம் 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு அளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூரிலுள்ள ஏழ்மையான தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர் 16 வயதுச் சிறுமி. இவரை கீழ்மாளிகை கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், இந்து முன்னணி ஒன்றியச் செயலாளருமான ஒரு நபர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கடத்திச் சென்றார்.  பின்னர், சிறுமியை தனது உறவினர்களும் கூட்டாளிகளுமான மூன்று நபர்களுடன் சேர்ந்து  பல நாட்கள் கும்பலாக வல்லுறவுக்கு கொடுமைக்கு உள்ளாக்கிப் படுகொலை செய்தார்.

 மாணவியின் தாயார் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, 20 நாட்கள் கழித்து பாழடைந்த கிணற்றில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம், பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புக்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 2020 முதல் மகளிர் நீதி மன்றத்தில் விசாரணை துவங்கியது. எனினும் 2023 அக்டோபர் முதல் 2024 ஏப்ரல் 8 வரை யிலான காலத்தில் தான், சாட்சிகள் விசாரணை, விசாரணை அதிகாரி வாக்குமூலம், ஆவணங்கள் சரிபார்ப்பு, இருதரப்பு வாதங்கள் ஆகியவை நடைபெற்றன.  

இந்நிலையில், முதன்மை குற்றவாளியான நபருக்கு ஐபிசி பிரிவு 364-இன் கீழ் 10 ஆண்டு, ஐபிசி 302-இன் கீழ் ஆயுள் தண்டனை, ஐபிசி 201-இன் கீழ் 3 ஆண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள், எஸ்.சி.-எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 மாதம் என தண்டனை விதித்து வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) அரிய லூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.  

தீர்ப்பின் போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் கே. சாமு வேல் ராஜ், அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ். அபி ராமன், வழக்கறிஞர் துரை,  அருணன், தீஒமு மாவட்டச் செயலாளர் என்.அருணாசலம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட செய லாளர் எம்.இளங்கோவன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மூத்த தலைவர் என். செல்லத்துரை, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் மணிவேல், வி. பரமசிவம், அரியலூர் ஒன் றிய செயலாளர் அருண் பாண்டியன், மாவட்டக்  குழு உறுப்பினர்கள் பி. துரைசாமி, எம். கருணா நிதி, ஆர் ரவீந்திரன், மாதர் சங்க ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் சிவசங்கரி, மாவட்டக்குழு உறுப்பினர் சிவரஞ்சனி மற்றும் தலித் சிறுமியின் குடும்பத்தினர் நீதிமன்றம் வந்திருந்தனர்.