districts

img

லாக்கப் மரணங்கள் இனி நடக்கக் கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

திருச்சிராப்பள்ளி,  மே 21 - இந்தியா முழுவதும் விசாரணை காவல், நீதிமன்ற காவல் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் மரணங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்தப் பட்டியலில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.  இதில் கடந்த 2018-19 வரை 89 மரணங்களும், 2019-20 வரை 57 மரணங்களும், 2020-21 வரை 61 மரணங்களும், 2021-22 பிப்ரவரி மாதம் வரை 93 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே விசாரணை காவல் மரணங்களை குறைக்க தமிழக காவல்துறை சார்பில் முதல்முறையாக Voice of Voiceless என்ற தலைப்பின் கீழ் திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா மற்றும் வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் இந்த முகாமில் பங்கேற்ற அனைத்து காவலர்களுக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் போதும், அவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும், அவர்கள் காவலர்களை தாக்கும் போது காவலர்கள் எப்படி தங்களை சுயமாக பாதுகாத்து குற்றவாளியையும் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர் தமிழக காவல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் தற்போது இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்று உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால், தமிழக முதல்வர் ஸ்டாலின் “இனி காவல்துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்களில் ஒருவர்கூட உயிர் இழக்கக் கூடாது” என உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்து இருக்கக் கூடிய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும் வர்மக்கலை, கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளும் இந்த கருத்தரங்கில் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன. சிறையில் இனி ஒருவர்கூட இறக்கக்கூடாது காவல் நிலைய மரணம் இனி இருக்கக்கூடாது. காவல்துறையினர் தேவைக்கு மட்டும் தங்கள் பலத்தை உபயோகப்படுத்தலாம்.  காவலர்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்தை குறைப்பதற்காக கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆபத்து வரும்போது காவலர்கள் திறமையாக செயல்பட வேண்டும். பொதுமக்களை காவல்துறையினர் ஆபத்து நேரத்தில் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வை அதிகமாக ஏற்படுத்தி வருகிறோம். கள்ளச்சாராயம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சில மலைப் பகுதிகளில் மட்டும் தான் இருக்கிறது. அதையும் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தற்போது காவல்துறையில் சேர்வதற்காக 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளனர். கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.