districts

img

கணவரின் சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் மனைவி

திருவாரூர், ஜன.29- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கஞ்சா நகரத்தில் வசித்து வந்த மகாலிங்கம் என்பவரது மகன் எம். ரமேஷ் (40). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தனக்கு நீதி வழங்கிட கோரி திருவாருர் வட்டம், அலிவலத்தில் வசித்து வரும் அவரது மனைவி ஆர்.கனகவள்ளி நன்னிலம் காவல்நிலையத்தில் கடந்த 20 ஆம் தேதி (வியாழக்கிழமை) புகார் அளித்துள்ளார். எம்.ரமேஷ் (40)-க்கும் அலிவலம் ஆர். தங்கப்பன் மகள் கனகவள்ளிக்கும் 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு ஆர்.கிஷோர் (7), ஆர். ஹரிவர்ஷன் (1) என்ற இரண்டு குழந்தை உள்ளனர். மறைந்த ரமேஷ் மயிலாடுதுறை கூறை நாட்டில் வாகனங்கள் கழுவும் நிலையம் நடத்தி வந்தார்.  திருவாருர் அலிவலத்தில் நடைபெற்ற ஒரு வளைகாப்பு விழாவிற்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளை அலிவலம் மாமனார் வீட்டில் விட்டிருந்தார். வளைகாப்பு முடிந்து சில தினங்கள் கழித்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று தான் செய்ய வேண்டிய கடமைக்காக சீர்வரிசையாக 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு தனது இருசக்கர வாகனத்தில் (TN51M9144) திருவாருர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.  

தனது மனைவியிடம் இடையிடையே தொலைபேசியில் தான் வரும் தகவலை கூறியிருந்தார்.  இந்நிலையில் அன்று மாலை 4.30 மணி அளவில் அவர் தன் மனைவியிடம் கடைசியாக பேசிய பிறகு எந்தவித தகவலும் இல்லை. இதுபற்றி சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த மக்களிடம் விசாரித்த போது தெரிய வந்த தகவல்கள்: சன்னாநல்லூருக்கும்  ஆண்டிபந்தலுக்கும் இடையில் திருப்பனையூர் செல்லும் நுழைவாயில் அருகில் இயற்கை உபாதைக்காக அவர் ஒதுங்கியிருக்கிறார். அப்போது அங்கு வந்த பாக்கம் கோட்டுர் ஜின்னா தெரு 1-63 என்ற முகவரியில் வசித்து வரும் முஹம்மது சித்திக் மகன் முஹம்மது மாலிக் மற்றும் புதுமனைத்தெருவில் வசித்துவரும் நத்தர் அலி மகன் முஹம்மது முஸ்தபா ஆகியோர் தங்களை ரமேஷிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தலாம் என்று வற்புறுத்தி உள்ளனர்.  இந்த இருவரும் ரமேஷ்க்கு பழக்கம் இல்லாதவர்கள் என்றும் தனது கணவருக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும் கனகவள்ளி கூறுகிறார்.  இந்த இளைஞர்கள் இருவரும் ரமேஷை மது வாங்கி குடிக்க செய்ததோடு கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு முஹம்மது மாலிக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ரமேஷை கடத்தி சென்றுள்ளனர்.  ரமேஷ் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை மின்னல் வேகத்தில் முஹம்மது முஸ்தபா ஓட்டி சென்றுள்ளார். இரண்டு வாகனங்களும் ஆண்டிப்பந்தல் வடகரை ரோட்டில் வேகமாக சென்றுள்ளன.

திருவாருர் செல்ல இருந்த  தம்மை வடகரை சாலையில் அழைத்து செல்வதை அறிந்து சுதாரித்த ரமேஷ், மாலிக் மற்றும் முஸ்தபா ஆகியோரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இந்த பின்னணியில் வடகரை சாலை கலியபெருமாள் வீட்டின் முன்பாக ரமேஷ் இறந்து  கிடப்பதாக ரமேஷின் எதிர்வீட்டில் வசிக்கும் எல்.ஐ.சி ஏஜெண்ட் சாமிநாதன் என்பவருக்கு நன்னிலம் காவல் ஆய்வாளர் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ரமேஷ் எப்படி இறந்தார் என்பது குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுகின்றன. மேலும் எந்த நேரமும் ரமேஷ் தனது கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலி 2 பவுன், ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரம், புதிய செல்போன் (Redmi 9 - 9626542143) ஆகியவற்றை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் சந்தேகத்துக்குரிய அணுகுமுறை
தனது கணவர் வருவார் என்று காத்திருந்த ரமேஷின் மனைவி கனகவள்ளி மற்றும் உறவினர்களுக்கு அவரின் இறப்பு செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணக்கிடங்கில் தான் அவரது உடலை பார்க்க முடிந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.  மிகவும் துரித கதியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மரணம் எதிர்பாராமல் நடந்தது போல எழுதி ரமேஷின் சகோதரர் சுரேஷிடம் கையெழுத்து வாங்கி உடலை அவசரஅவசரமாக ஒப்படைத்துள்ளனர். என்ன நடந்தது என்ற குழப்பத்திலும், கலக்கத்திலும் இருந்த உறவினர்கள் ரமேஷ் உடலை பெற்று அவர் வசித்து வந்த கஞ்சா நகரத்தில் மிகுந்த மனவேதனையுடன் அடக்கம் செய்தனர்.

 நன்னிலம் காவல் ஆய்வாளர், ரமேஷின் மைத்துனர் த.சரவணகுமாரிடம் “உனது மைத்துனரை இருசக்கர வாகனத்தில் நீ அழைத்து வந்த போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டதாக வழக்கை முடித்து கொள்கிறாயா” என்று கேட்டுள்ளார். அதேபோல நன்னிலம் உதவி ஆய்வாளர் ஒருபடி மேலே சென்று “வாகனத்தில் வருபவன் நகை நட்டு எடுத்துவருவான், அதற்கென்ன. எழுதிக் கொடுத்து விட்டு உடலை வாங்கி செல்லுங்கள்” என்று இரக்கம் இல்லாமல் பேசியுள்ளார். மறுபுறம் ரமேஷிடம் மரணத்திற்கு காரணமான முஹம்மது மாலிக், முஹம்மது முஸ்தபா ஆகிய இருவரும் தாங்கள் வெளி நாடு செல்வதால் தங்கள் மீது வழக்கு பதிய வேண்டாம் என்று காவல்துறையிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.  இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களின் பால் தொடரும் கேள்விகளால், நன்னிலம் காவல்துறையினரின் அலட்சிய அவரச அணுகுமுறையால், ரமேஷின் மரணத்தில் சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. முதல் தகவல் அறிக்கையும், உடற்கூறு ஆய்வும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளதும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.  

கணவனை அடக்கம் செய்துவிட்டு இன்றளவும் மனகுழப்பத்தில் தனது பிஞ்சுகுழந்தைகளை வைத்துகொண்டு தவித்து வருகிறார் கனகவள்ளி. யாரிடம் உதவி கேட்பது என்று புரியாமல் துயரத்திலிருந்த கனகவள்ளி அவரது சகோதரர் சரவணக்குமாரின் முயற்சியில் சில தோழர்களின் உதவியோடு நன்னிலம் காவல் நிலையத்தில் முறையான நீதிவிசாரணை நடத்திடக்கோரி புகார் ஒன்றை ஜனவரி 20ஆம் தேதி வியாழக்கிழமையன்று அளித்துள்ளார். நன்னிலம் காவல்துறையினர், புகார் அளிக்கவந்த கனகவள்ளியிடம் அச்சுறுத்தும் வகையில் கேள்விகளை கேட்டுள்ளனர். இதே புகார் மனுக்கள் மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், தரங்கம்பாடி காவல்ஆய்வாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.  கண்ணீரில் கலங்கி தவிக்கும் கனகவள்ளிக்கும் அவரது பச்சிளம் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க காவல்துறை உரிய புலன் விசாரணையை மீண்டும் செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டுமென்பது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை தலைவர் இப்பிரச்சனையில் தலையிட்டு நியாயமான விசாரணை நடைபெறுவதற்கும் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்டவும் கணவணை இழந்துவாடும் கனகவள்ளி மற்றும் அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி இழப்பீடு கிடைத்திடவும் நடவடிக்கை எடுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனகவள்ளி குடும்பத்திற்கு நியாயம் கிடைப்பதன் மூலமாக காவல்துறையின் மீது ஏற்பட்டுவரும் தொடர் களங்கத்தை துடைக்க வேண்டும். - எஸ்.நவமணி