திருமுருகன்பூண்டியில் மாதக் கணக்கில் குடிநீர் வராமல் இருப்பதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை, அம்மாபாளையம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 ஆவது வார்டில் அம்மன் மஹால் வீதி, கஸ்தூரி பாய் வீதி உள்ளிட்ட பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்கக் கோரி செவ்வாயன்று காலை பொதுமக்களைத் திரட்டிச் சென்று நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு நகராட்சி ஆணையர், ஆறு லட்ச ரூபாய் வரி பாக்கி செலுத்தாமல் உள்ளனர். நீங்கள் குடிநீர் கேட்டால் எப்படி கொடுப்பது?" எனக் கேட்டுள்ளார்.
மாதக் கணக்கில் குடிநீர் வழங்காமல் இருந்துவிட்டு, அதைக் கேட்க வரும் பொதுமக்களிடம் முறையாக பதில் சொல்லாமல், பிரச்சனையை திசை திருப்பாதீர்கள்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தினசரி பயன்படுத்தும் உப்புத் தண்ணீரும் வரவில்லை. வீட்டுக் குழாய் மூலமாக குடிநீரும் வரவில்லை. அதனைத் தருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் நகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு நாட்களில் தண்ணீர் கிடைத்து விடும் எனக் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தகோபால் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம் ,தேவராஜன், கிளைச் செயலாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய குழு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் இணைப்புக் கோரிக்கை விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கடந்த முறை பொறுப்பில் இருந்தவர்கள் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கியதைக் கண்டித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்திய மக்கள் போராட்டங்களின், சட்டப் போராட்டங்களின் விளைவாக இரண்டு கோடி ரூபாய் வரை நகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது என்பதை மக்கள் அறிவார்கள்.
இந்நிலையில், 24 ஆவது வார்டில் மாதக் கணக்கில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளதைக் கேட்டபோது, அதை திசை திருப்பும் நோக்கில், மன்றத்துக்கும் தெரிந்த 14 ஆவது வார்டு சாக்கடைப் பிரச்சனையை வேண்டுமென்றே பேசியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் தேவராஜின் பேச்சைச் திரித்துக் கூறியும் பிரச்சினை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தான் பயன்படுத்திய வார்த்தை தவறாகப் புரிந்து கொள்ளப்படுமானால் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று தேவராஜ் மன்றக் கூட்டத்திலேயே தெரிவித்துள்ளார்.
மேலும் நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் குமார் பேசும்போது, " தண்ணீர் கேட்க வந்தவர்கள் ரவுடிகளைப் போல் நடந்து கொள்கிறார்கள். திருமுருகன்பூண்டி நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் தண்ணீர் கேட்க வரவில்லை.", என்று சொந்த மக்களையே, வெளியூரில் இருந்து அழைத்து வந்துள்ளதைப் போன்று கொதித்துள்ளார்.
மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும், மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமல்லாது, உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அனைவரையும் ரௌடிகளாகச் சித்தரித்து நகர்மன்றத் தலைவர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
எனவே, நகராட்சி நிர்வாகம், குடிநீருக்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் இணைப்பு வழங்கவும், அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவினாசி ஒன்றியக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.