தஞ்சாவூர், பிப்.12 - தஞ்சாவூர் மாநகராட்சி 35 ஆவது வார்டில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.வைஜெயந்திமாலா, கொட்டும் மழையிலும், கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக நிர்வாகி அருள்மொழித்தேவன் தலைமையில், திமுக நிர்வாகி அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாநகரச் செயலாளர் வடிவேலன், கரிகாலன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முருகேசன், வார்டு செயலாளர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் அன்புநகர் 1, 2, 3 ஆவது தெருக்களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளர் வைஜெயந்திமாலா கூறுகையில், “தட்டுப்பாடின்றி சுகாதாரமான குடிநீர் வசதி செய்து தரப்படும். குப்பைகளை தினசரி அகற்றி, வார்டை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாமன்ற உறுப்பினராக என்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்து தருவேன். சாதாரண மக்களில் ஒருவரான என்னை, உங்களில் ஒருவரான என்னை அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.