தஞ்சையில் விலைமதிக்க முடியாத பச்சை மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியில், தொன்மையான கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இப்பிரிவின் காவல் துறை கூடுதல் இயக்குனர் முனைவர் க.ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், காவல் துறை தலைவர் முனைவர் இரா.தினகரன், காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி வழிகாட்டுதலில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் இரா.இராஜாராம், ப.அசோக் நடராஜன் ஆகியோர் தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், பாலச்சந்தர் மற்றும் காவல்துறையினர், தஞ்சாவூர் வந்தனர்.
பின்னர், அவர்கள் தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அந்த வீட்டில் இருந்த சாமியப்பன் என்பவரின் மகன் அருண் பாஸ்கர் என்பவரிடம், தொன்மையான கோயில் சிலைகள் ஏதேனும் உள்ளதா என காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, அவர் தனது தந்தை சாமியப்பன் வசம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் கூறினார்.
விசாரணையில் அந்த சிலை அவரது தந்தையின் வசம் எப்படி கிடைத்தது, எவர் மூலம் கிடைத்தது என்பது குறித்த தகவல் மற்றும் ஆவணம் ஏதும் இல்லை என அவர் தெரிவித்தார். எனவே, அந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை விசாரணையின் பொருட்டு ஆஜர்படுத்துமாறு கேட்டபோது, வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் ஏதேனும் கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில் சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டது. காவல்துறை ஆய்வாளர் முருகேசன் அளித்த தனி அறிக்கையின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து காவல் துறை மூலம் பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை உயர் அலுவலர்கள் கைப்பற்றப்பட்ட பச்சை மரகத லிங்கத்தின் மதிப்பு ரூ 500 கோடிக்கும் மேல் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் அடுத்த திருக்குவளையில் உள்ள புகழ் பெற்ற தியாகராஜர் கோயிலில் இருந்த தொன்மையான பச்சை மரகத சிலை கடந்த 2016 ஆம் ஆண்டு திருட்டு போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தருமபுரம் ஆதீன நிர்வாகி சபரிராஜன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கம் திருவாரூரில் திருடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து அபூர்வ மரகத லிங்கத்தை கொண்டு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மரகதத்தால் செய்யப்பட்ட சிலைகள் சோழர் ஆட்சிக்காலத்தில் ஒரு சில கோயில்களில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.