தஞ்சாவூர், மார்ச் 5 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு (NMMS) சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 9 ஆம் வகுப்பு படிக்கும் 1,295 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி என 6 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 1,304 மாணவ - மாணவிகளில் 1,295 பேர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர். 9 பேர் தேர்வெழுத வரவில்லை. அனைத்து மையங்களிலும், மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.1,000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.12,000 என, 4 வருடங்களுக்கு ரூ.48,000 வழங்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.