districts

பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை இழப்பிலிருந்து மீட்க நடவடிக்கை  தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண் இயக்குநர் தகவல்

தஞ்சாவூர், டிச.30-  பொதுத் துறை சர்க்கரை ஆலைகளை இழப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தமிழ்நாடு சர்க்கரை கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான சி.விஜயராஜ்குமார் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 47 ஆவது பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சர்க்கரை கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான சி. விஜயராஜ்குமார் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர்கள் என்.ஓ.சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜி.செந்தில்குமாரி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சர்க்கரைக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான சி.விஜயராஜ்குமார் பேசியதாவது: “பொதுத் துறை, கூட்டுறவுத் துறை சர்க்கரை ஆலைகளில் இரு ஆலைகளைத் தவிர, மற்ற ஆலைகள் லாபகரமாக இல்லை. இவற்றின் வரவு, செலவுகளைப் பார்த்தால் நட்டத்தில் இயங்கக்கூடிய ஆலைகளாகத்தான் உள்ளன.  அரவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தியில் எதிர்பார்ப்பு, உற்பத்தி செய்யப்படவுள்ள அளவைக் கூறி, அதில் 80 - 85 விழுக்காடு வரை கூட்டுறவு வங்கிகளில் கடனாகப் பெறுகிறோம். இந்தப் பணம் கரும்புக்கான தொகை மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய செலவினங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆலையை 3 மாதங்களுக்கு பிறகு தொடர்ச்சியாக இயக்குவதற்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. அதை அரசிடமிருந்து முன் பணமாகவோ, கடனாகவோ பெறுகிறோம். இதனால்தான், விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த கால தாமதத்தைக் குறைக்க வேண்டுமானால், நாமே கரும்பு உற்பத்தியில் மிகை நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆலையின் அரவைத் திறனை முழுமையாகப் பயன்படுத்தினால்தான் பாதகங்களை உடைத்து, சாதகமான நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். குருங்குளம் சர்க்கரை ஆலையிலும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையிலும் ஏறக்குறைய ரூ.100 கோடி இழப்பாக இருந்த நிலையில், அதில் நிகழாண்டு ரூ.10-12 கோடி வரை குறைக்கப்படும். இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல, குருங்குளம் ஆலையில் நிலவும் நிதிச் சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு விலையில் டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகையாக டிசம்பர் 7 ஆம் தேதி முதல் அரசுக் கொடுக்கிறது. கூட்டுறவு, அரசுத் துறை ஆலைகளில் இத்தொகை 15 நாள்களுக்குள் 99.99 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது. குருங்குளம் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதை விரைவாக முடிக்க துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.  குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஒரு நாளைக்கு அரவைத் திறன் 2.1 டன்னாக உள்ளது. சர்க்கரை 100 விழுக்காடு அரவை செய்ய வேண்டுமானால் 4.30 லட்சம் டன்களாகவது அரைத்தால்தான் லாப- நட்டமின்றி இயக்கக் கூடிய நிலையை அடைய முடியும். அப்போதுதான், ஆலை அளவில் முடிவு எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்” இவ்வாறு அவர் பேசினார்.