மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட 23ஆவது மாநாடு ஜலகண்டாபுரத்தில் துவங்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட 23 ஆவது மாநாடு ஜலகண்டாபுரத்திலுள்ள தோழர் பி. தர்மலிங்கம் நினைவரங்கில் வியாழனன்று துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே. வெங்கடாசலம் கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க, வரவேற்புக் குழு தலைவர் மேவை சண்முகராஜா வரவேற்புரையாற்றினார். இம்மாநாட்டை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி வேலை அறிக்கையை முன்மொழிந்து பேசினார்.
தீர்மானங்கள்
இம்மாநாட்டில் ஒன்றிய மோடி அரசின் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும் பிப்.23, 24 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவது. சேலம் மாவட்டம் முழுவதும் நுண் நிதி நிறுவனங்களின் கந்துவட்டி வசூல் கொடுமைகளுக்கு முடிவு கட்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் உருக்காலையை தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாக செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜோதி பயணம்
முன்னதாக, சேலம் மேற்கு அறியா கவுண்டம்பட்டி பகுதியிலிருந்து சேலம் சிறை தியாகி ஆறுமுகம் நினைவு ஜோதி கொண்டு வரப்பட்டது. இதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. கணபதி பெற்றுக் கொண்டார். நங்கவள்ளியில் இருந்து கொண்டு வரப்பட்ட பெரிய சோரகை பெருமாள் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குழந்தைவேல் பெற்றுக் கொண்டார், மேட்டூர் பகுதி தொழிற்சங்க அரங்கத்திலிரந்து எடுத்து வரப்பட்ட எம். சீரங்கன் நினைவு ஜோதியை, மாவட்ட குழு உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். நங்கவள்ளி பகுதியிலிருந்து வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி எடுத்து வரப்பட்டது. அதனை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி பெற்றுக்கொண்டார். கொங்கணாபுரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடியை மாவட்ட குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லா பெற்றுக்கொண்டார்.