districts

img

கழிவு நீர் வழிந்து ஓடுவதைக் கண்டித்து சாலை மறியல்

தஞ்சாவூர், மார்ச் 4-  தஞ்சாவூர் விளார் சாலையில் புதை சாக்கடையிலிருந்து கழிவு நீர் அடிக்கடி வழிந்தோடுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலக வாகனத்தைச் சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் விளார் சாலை மாரிகுளம் சுடுகாடு அருகே புதை சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி சாலையோர வாய்க்காலில் கழிவு நீர் வழிந்தோடியது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினர். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மாரிகுளம் சுடுகாடு அருகே பள்ளம் தோண்டி புதை சாக்கடையில் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால், இப்பணி முடிவடைந்து 3 மாதங்களாகியும், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த இடத்திலிருந்து மீண்டும் கழிவு நீர் வழிந்து சாலையோர வாய்க்காலில் ஓடுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், விளார் சாலையில் செவ்வாய்க்கிழமை வந்த மாநகராட்சி அலுவலக மினி வேனை சிறைப்பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த பழ. ராஜேந்திரன், ராசு.முனியாண்டி, எஸ்.எம்.ராஜேந்திரன், ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சீரமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியதால், போராட்டம் கைவிடப்பட்டது.