அரியலூர், மார்ச் 4- மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, எதிரி கட்சியாக ஆளுநர் செயல்படுகிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சாடினார். அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ கா.சொ. கணேசன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வரவேற்புரையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசும் போது, மக்களின் வரிப்பணத்தில் இங்கு சம்பளத்தை வாங்கிவிட்டு அரசாங்கத்துக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்தி கொண்டிருக்கிறார் ஒரு வடநாட்டிலிருந்து வந்த ஒரு ஆசாமி கவர்னர். இங்கே நம் வரிப்பணத்தில் இருந்து மாநில அரசு கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு, எதிர்க்கட்சி தலைவராக இவர் ஆகிவிட்டார். எதிர்க்கட்சி கூட அல்ல, அந்த வார்த்தை கூட சரியில்லை, எதிரி கட்சி தலைவராக இருக்கிறார். அரசை விமர்சியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே போய் ஆர்எஸ்எஸ் கொடியை போட்டுக் கொண்டு அங்கே செய்யவேண்டும். அதுதான் மிக முக்கியம். கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. இந்த அரசாங்கத்தினுடைய கொள்கையை விமர்சிப்பதற்கு துளி கூட இந்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஒரு அம்மாஞ்சியாக இருக்கக்கூடிய ஆளுநர், ஆர்எஸ்எஸ்க்கு எடுபுடியாக தில்லி அரசினுடைய ஏஜென்ட்டாக இருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசுவது என்று சொன்னால் அதை எதிர்த்து கருத்துச் சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை பெற்றிருக்கும் இயக்கமாக நாங்கள் உள்ளோம் எனப் பேசினார். கூட்டத்தில் திமுக, திராவிடர் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.