districts

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து : மீண்டும் தீர்மானம்

காஞ்சிபுரம், நவ. 1- பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். சென்னையின் 2ஆவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4,800க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமையவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தங்களது குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகளை அழித்து கொண்டு வரப்படும் இந்த புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாங்கள் வாழும் இந்த கிராமத்தை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என கூறியும், தங்கள் பகுதிகளில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 97 நாட்களாக தொடர்ந்து அமைதியான முறையில் இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 1) ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 3ஆவது முறையாக புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முன்னிலையில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த காந்தி ஜெயந்தி மற்றும் சுதந்திர தினத்தன்று  நடைபெற்ற கிராம சபைகளில் இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.