கடலூர், பிப். 25- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் கோதண்ட ராமபுரத்தைச் சேர்ந்தவர் தனுஷ் மகன் நந்தகுமார் (31). கூலித் தொழிலாளியான இவர் தனியாக வசித்து வந்துள்ளார். கிடைக்கும் வேலைக்குச் செல்வது, அங்குள்ள வர்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வருவது வழக்கம். 21.8.2020 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அவர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எம்.எழிலரசி அளித்த தீர்ப்பில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நந்தகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும்” விதித்தார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நலத்துறை மூலம் ரூ.2 லட்சம் பெற்றுத்தர மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.