கடலூர், ஏப். 23- பென்னாடம் அம்பிகா சர்க்கரை ஆலை, சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் எஸ்.பலராமன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ராமச் சந்திரன், மாவட்ட பொருளாளர் எஸ். தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.லோகநாதன், ஆர்.மகாலிங்கம், மாநில துணை செயலாளர்கள் ஜி.ஆர். ரவிச்சந்திரன், பெருமாள், மாநில துணைத் தலைவர்கள் ஏ.கே.ராஜேந்திரன், காசிநாதன் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, ரங்கசாமி ராஜேந்திரன், ெஜயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேசிய கடன் தீர்ப்பாயத்திற்கு சென்றுவிட்ட அம்பிகா, ஆரூரான் அருணாச்சலா, தரணி சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூபாய் 800 கோடியை விவசாயிகளுக்கு ஆதரவாக மாநில அரசு நின்று பெற்று தரவேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய லாப பங்கு தொகை மற்றும் எஸ்.ஏ.பி பாக்கி ரூ.1217 கோடியை மாநில அரசு பெற்றுத் தர வேண்டும். வருவாய் பங்கீடு முறை சட்டத்தை ரத்து செய்துவிட்டு மாநில அரசுகளுக்கு பரிந்துரை விலையை அறிவித்து வழங்கிட வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூபாய் நான்காயிரம் விலை வழங்க வேண்டும். இஐடி பாரி சக்கரை ஆலை டன் ஒன்றுக்கு 150 கிலோ முதல் 200 கிலோ கரும்பு கழிவுகள் என்ற பெயரில் பிடித்தம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த ஆலையில் நடைபெறும் எடை மோசடி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.