கோவை மாவட்டம் சூலூர் அருகே லட்சுமி நாயக்கன்பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமசாமி நாயுடு வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் ஆசிரியர்களால் மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அதுகுறித்து விளக்கம் பெற இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் நேற்று மாலை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அம்பிகாவை நேரில் சந்தித்து பேசிவிட்டு பேருந்தில் திரும்பியுள்ளனர்.
அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் என கூறப்படும் குட்டி, ரமேஷ், ராமசாமி ஆகிய மூவர் பேருந்தை வழிமறித்து, இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை கீழே இறக்கி மத மற்றும் சாதிய மோதலை ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் ரங்கசாமி என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க உள்ளதாக மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.