ராயபுரம், செப்.20- சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் 520 நகர்புற வாழ்வாதார குடியிருப்பு வீடுகள் இருந்தது. அவை மிகவும் பழுதடைந்து சிதிலமடைந்து இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவை முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 ஆண்டுகளாகியும் இன்னும் வீடுகள் கட்டும் பணி முழுவதும் முடியவில்லை. தற்போது 70 விழுக்காடு பணிகள் முடிந்துள்ள நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்கக்கோரி அங்கு வசித்த பெண்கள் திங்களன்று காசிமேடு சூரிய நாராயணன் தெருவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபினேசர், ராயபுரம் உதவி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி விரைவில் முடிக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.