விழுப்புரம், ஜூன் 16- சென்னையை தலைமையிடமாகக் கொண்டு எம்ஜிஎம் குழுமம் செயல்படுகிறது. இந்த குழுமம் ஹோட்டல்கள், சரக்கு போக்குவரத்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொழில், மதுபானம் தயாரிப்பு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, மலேசியாவிலும் இந்த குழுமத்திற்கு அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தக் குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. அந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள தலைமை அலுவலகம், சாந்தோமில் உள்ள எம்ஜிஎம் குழும உரிமையாளர் வீடு, ஏற்றுமதி, இறக்குமதி அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, மதுபான ஆலை, நட்சத்திர விடுதி, வேளாங்கண்ணியில் உள்ள ஓட்டல்கள், பெங்களூரு என 40 இடங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். புன்கிழமை நள்ளிரவை கடந்தும் சோதனை நீடித்தது. இந்நிலையில், சோதனைகள் முழுமையடையாத நிலையில், வியாழக்கிழமை இரண்டாவது நாளாக எம்.ஜி. எம் குழுமத்துக்கு செ?ந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் உள்ள மதுபான ஆலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது முக்கிய ஆவணங்களை நிறுவனத்தின் ஊழியர் வயல்வெளிகளில் வீசியதாகவும், அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.