districts

img

நீதிமன்ற உத்தரவை காட்டி சுமைப்பணி தொழிலாளர்கள் கைது மதுராந்தகம் காவல் துறை அராஜகம்

மதுராந்தகம். பிப். 15- மதுராந்தகம் நகரில் பல வருடங்களாக சுமைப்பணித் தொழில் செய்துவரும் தொழிலாளர்களை நீதிமன்ற உத்தரவை காட்டி காவல் துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் உள்ளனர்.  இவர்கள்  நகர வணிக நிறுவனங்களுக்கு வரும்  சுமைகளை ஏற்றி, இறக்கும் பணியை செய்து வருகின்றனர்.  இந்நிலையில்  வணிக நிறுவனங்களுக்கு வரும் சுமைகளை  தங்களது ஊழியர்களை வைத்தே இறக்கிக் கொள்ள அனு மதிக்கவேண்டும் என்று கூறி சில வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 10 ஆண்டுகள் நடைபெற்ற  இந்த வழக்கில்  வணிக நிறுவனங்களே சுமைகளை இறக்கிக் கொள்ளலாம் என நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.  இதனால்  சுமைப்பணி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று (பிப் 15) மதுராந்தகம் நகர வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர்கள் நீதிமன்ற உத்தரவைக் காட்டி சுமைப்பணி தொழிலாளர்களை புறக்கணித்து காவல் துறையின் உதவியுடன் சுமைகளை அவர்களே இறக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுமைப்பணி தொழிலாளர்கள் 35 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தடுக்கச் சென்ற சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.மாசிலாமணியையும் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சுமைப்பணி தொழிலாளர் சங்க  கவுரவத் தலைவர்  டி.கிருஷ்ணராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின்  வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்  அர்ஜூன்குமார்,  சிஐடியு நிர்வாகிகள் நடராஜ், ரமேஷ்  ஆகியோருடன் மதுராந்தகம் காவல் துணை கண்காணிப் பாளர் பாரத் பேசினார். இப்பேச்சுவார்த்தையில் தேர்தல்விதி நடைமுறையில் இருப்பதால் தேர்தல் முடிந்த வுடன் இருதரப்பையும் அழைத்து பேச்சு நடத்தப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர், சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் க.பகத்சிங்தாஸ் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனை நேரில் சந்தித்து கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும், இப்பிரச்சனையில் வருவாய்த்துறையினரை இணைத்து பேச்சு நடத்திட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கைது செய்யப்பட்ட சுமைப்பணி தொழிலாளர்களை நேரில் சந்தித்து பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.