விழுப்புரம்,மே.8- விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்டது செவலபுரை கிராமம். இங்கு சர்வே எண். 323/2ல் 4.22 எக்டேர் அதாவது, 11 ஏக்கர் நிலத்தின் அருகே குட்டை உள்ளது. இங்கு 93 குடும்பத்தினர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த குட்டைக்கும் மக்கள் வீடு கட்டி வாழ்கின்ற இடத்திற்கும் நீர்பிடிப்பால் இதுவரைக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து வரும் இந்துசமய அறநிலைத் துறை அதிகாரிகள். செவலபுரையில் குடியிருப்புகளையும் ஆக்கிரமிப்பு என்று அங்குள்ளள வீடுகளை இடித்து மக்களையும் வெளியேற்றும் முயற்சி மேல்மலையனூர் வட்டாட்சியர் கோவர்தன் தலைமையில் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதே அரசு புறம்போக்கு நிலப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட அரசு பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி, சத்துணவு மையம், ஊராட்சி மன்றக் கட்டடம், கிராம சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலங்களுக்கும் சொந்தமாக கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரைக்கும் அந்த அலுவலங்கள் இயங்கி வருகிறது. அரசு நீர்ப்பிடிப்பு புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்களை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஊருக்கே குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், சிமெண்ட் சாலையும் வட்டார வளர்ச்சி அலுவலகமும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு கட்டடங்கள் இடிக்கப்படுமா? இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், “ஏழை மக்களின் வீடுகளை இடிப்பவர்கள் அதே அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்களை முதலில் இடிக்காதது ஏன்? என்றும் மாவட்டம் முழுவதும் நீர்நிலை புறம்போக்கு மற்றும் ஏரிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்களை இடிப்பார்களா என்றும் கேள்வி எழுப்பினர். பாதிக்கப்பட்ட சேகர் மனைவி வேண்டா, “எங்கள் மாமனார் காலத்திலிருந்து (சுமார் 80 வருடம்) இங்கு வசித்து வருகின்றோம். நீதிமன்ற உத்தரவை என்று கூறி திடீரென்று எங்கள் வீட்டை இடித்து விட்டார்கள். இப்போது தங்குவதற்குகூட இடமில்லை”என்றார். செல்வராஜ் மனைவி குப்பு, “எனது மாமனார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கூரை வீடு கட்டியிருந்தார். நாங்கள் இப்போதுதான் கடன் வாங்கி சிமெண்ட் சீட்டு (கூரை) மாற்றினோம். அதற்குள் அதிகாரிகள் இடித்து தள்ளிவிட்டார்கள் என கண்ணீருடன் கூறினார்.
ரகுபதி மனைவி தேவி, “திடீரென ஜெசிபியை கொண்டு வந்து வீட்டை தரைமட்டமாக இடித்து தள்ளி விட்டனர். அரசி உள்ளிட்ட அத்தியாய பொருட்களை எடுக்கக் கூட கால அவகாசம் கொடுக்க அதிகாரிகளுக்கு கருணை காட்டவில்லை. மூன்று குழந்தைகளை வைத்து கொண்டு அவதிப்பட்டு வருகிறோம்” என்றார். சிபிஎம் மேல்மலையனூர் வட்டச் செயலாளர் டி.முருகன்,“ மூன்று தலைமுறையாக வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு உடனடியாக வகை மாற்றம் செய்து அரசு பட்டா வழங்க வேண்டும்” என்றார். சிபிஎம் செவலபுரை கிளைச் செயலாளர் கே.துரைசாமி,“சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல், அத்தியாவசிய பொருட்களை எடுக்க விடாமல் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகளின் செயல் கண்டிக்கதக்கது. அதிகாரிகள் நடவடிக்கையால் பாதித்துள்ள மக்களுக்கு உரிய இழப்பீடும், குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டாவும் வழங்க வேண்டும்” என்றார். ஒரு அங்குலம் நிலம்கூட சொந்தமாக இல்லாத ஏழைகளை ஆக்கிரமிப்பாளர்கள் என முத்திரை குத்தி வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி பரிதவிக்க செய்த அதிகாரிகளின் நடவடிகை மனிதாபிமானமற்றதாகும். -பொன்னுசாமி