districts

img

சொத்து வரி செலுத்தாத வீடுகளுக்கு சீல்! சென்னை மாநகராட்சி ஆலோசனை

சென்னை, ஜூலை 24-  சென்னையில் சொத்துவரி செலுத்தாத வீடுகளுக்கு சீல் வைக்க உள்ளதாக மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்து வரி பற்றி வீட்டின் உரிமை யாளர்களுக்கு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வர்களுக்கு சொத்துவரி குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சொத்துவரி மிக அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி கூறி இருந்தது. அதன்படி சுமார் 4 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சியில் கடிதம் கொடுத்தனர். இருப்பினும் சொத்து வரியை குறைக்க போவதில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் சூசகமாக தெரிவித்துள்ளனர். அதிருப்தியில் இருப்பவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் கூறினர். இதற்கிடையே சொத்து வரியை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சொத்து வரியை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.