பொன்னேரி,ஏப்.28- பொன்னேரி அருகே உள்ளது ஏலியம்பேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்னேரியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு அரசு பேருந்தில் (எண் டி42)சென்று வந்தனர். இந்த பேருந்து பொன்னேரி, ஏலியம்பேடு, பெருவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆரம்பாக்கம் சென்று வருகிறது. காலை, மாலை நேரத்தில் இந்த பஸ்சை நம்பி பள்ளி மாணவ-மாணவி கள் மற்றும் கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களாக பேருந்துகள் உரிய நேரத்திற்கு வருவ தில்லை என்ற புகார் எழுந்தது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே வியாழனன்று குறித்த நேரத்தில் பேருந்து வராததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி பெருவாயில் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.