districts

மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வாழ்வாதாரத்தை காக்க கதறி அழுத தொழிலாளர்கள்

அரியலூர், பிப். 5 - அரியலூர் மாவட்டம் தளவாய் பகுதியில் செல்லும் சின்னாறு ஓடையில் அங்கனூர், சிவராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பொது காரியத்திற்காக மாட்டு வண்டி மூலம் மணல் ஏற்றி சென்றனர்.  அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதை அறிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ய முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதன், மணல் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் காவலர்களின் காலில் விழுந்து கதறி அழுது, தங்கள் வாழ்வாதாரமான மாட்டு வண்டிகளை விடுவிக்க வேண்டும் என்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சி பிரமுகர்கள் போலீசாரிடம் பேசினர். எனினும் போலீசார், “மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்வதாகவும் காவல்நிலையத்திற்கு வந்து மாட்டு வண்டிகளை எடுத்துச் செல்லுங்கள்” என தொழிலாளர்களிடம் கூறிவிட்டு மணலுடன் மாட்டு வண்டிகளை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.