districts

காப்பீடு பெற்றுத் தருவதாக கூறி இணையம் மூலம் பணமோசடி கர்நாடகத்தை சேர்ந்தவர் கைது

அரியலூர், மே 14 - காப்பீடு பெற்று தருவதாக கூறி இணையம் மூலம் பணமோசடி செய்த கர்நாடகத்தை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.  அரியலூரை சேர்ந்தவர் கண்ணுப்பிள்ளை. இவர் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 26 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மொபைலுக்கு வந்த அழைப்பை நம்பி ரூ.10 லட்சம் இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டவர் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்திலுள்ள முல்பாஹால் என்ற கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பதும் இவர் பெங்களூருவில் உள்ள FINE CAPITAL SOLUTION என்ற நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து கர்நாடக மாநிலம் சென்ற அரியலூர் சைபர் கிரைம் போலீசார் பூபாலனை கைது செய்து அரியலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர் பாலிசிதாரர் மொபைல் நம்பரை பெற்று செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து வங்கிக் கணக்கு மற்றும் Phone pe மூலம் சிறிது சிறிதாக ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 1,00,000 ரூபாய் பணம், 1,75,000 மதிப்புள்ள நகை, இணைய மோசடிக்கு பயன்படுத்திய 7 ஏடிஎம் கார்டு, 3 பேங்க் பாஸ்புக், செக்புக் செல்போன்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துரிதமாக செயல்பட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டினார்.