மயிலாடுதுறை, ஜூன் 9 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், நல்லாடை மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலனுக்காக ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் நல்லாடை மட்டுமின்றி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
இளைஞர்களுக்கு விளையாட்டை ஊக்குவிப்பதற்கான பல்வேறு போட்டிகள், உபகரணங்கள் வழங்குவதோடு ஏழை, எளிய மக்களுக்கு சமூக சேவையாற்றிட கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று நல்லாடை டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை உருவாக்கி அதன்மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நல்லாடை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற ஏழை-எளிய மக்கள் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆம்புலன்ஸ் வழங்கும் விழா மற்றும் தேனிசை தென்றல் தேவா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நல்லாடையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதாமுருகன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ.அருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆம்புலன்ஸ் சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இதில் டிஆர்ஓ மணிமேகலை, இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விஜயபாலன், ரங்கநாதன், சித்திக், செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் ரபியா நர்கீஸ்பானு, ஒன்றிய கவுன்சிலர் கிருபாவதி, நல்லாடை ஊராட்சி தலைவர் காவேரி ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அறக்கட்டளை பொருளாளர் மதிவாணன் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு நன்றி கூறினார்.