புதுச்சேரி,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் கார்ப்ரேட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்து வாலிபர் சங்கம் சார்பில் ‘அல்வா’ கொடுக்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்புக்கு வரும் முன் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று உறுதி அளித்த ஒன்றிய பாஜக அரசு, இதுநாள்வரை கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றாததையும் தற்போது தாக்கல் செய்துள்ள ஒன்றிய பட்ஜெட்டில் வாலிபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த எந்தவித திட்டமும் இல்லாததை கண்டித்தும், புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய பாஜக மற்றும் மாநில என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுகளை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்த், பொருளாளர் சஞ்சய், நிர்வாகிகள் ரஞ்சித், பிரதாப், நவீன், நிலவழகன், கௌசிகன், ராஜ்குமார் உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, ஒன்றிய பட்ஜெட்டில் வாலிபர்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை கண்டிக்கும் வகையில் சாலையில் செல்பவர்களுக்கு ‘அல்வா’ வழங்கினர்.