districts

img

பாரம்பரிய நகரம் பத்மநாபபுரம் பாதுகாக்கப்பட... 30 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனை தொடர...

சுமார் 200 ஆண்டுகள் திருவாங்கூர் மன்னர்களின் உறைவிடமாக திகழ்ந்த பழம்பெரும் நகரம் பத்ம நாபபுரம். கடந்த ஆண்டு பெய்த பெருமழை யில் பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றி அமைக்கப்பட்டு சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தபோது தமிழக பொதுப்பணித்துறை பாரம்பரியம் மிக்க இந்த கோட்டையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதுபோல் இங்குள்ள மக்களின் அடிப்ப டை தேவைகளுக்காகவும் வாழ்க்கை  மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்போடு பணி யாற்றி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதன் நீட்சியாக தற்போது பிப்ரவரி 19இல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது வேட்பாளர்களை நிறுத்தியி ருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னி யாகுமரி மாவட்டச் செயலாளராக முதன்  முதலில் பொறுப்பு வகித்தவர் எம்.எம்.அலி. இவரது மகன் எம்.எம்.சாதிக் அலி பத்மநாப புரம் நகராட்சியின் 4 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிடுகிறார். வெட்டிக் கோணம், மக்காபாளையம் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குடிநீரும், சாக்கடையும் மக்களை கடுமையாக பாதிக்கும் பிரச்சனைகளாக உள்ளன. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் எஸ்.நூர்முகமது பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தை தவிர கடந்த 30 ஆண்டுகளில் மாற்றுத்திட்டம் ஏதும் கொண்டு வரப்படவில்லை. 30 ஆண்டுகளாகியும் ஆற்றுநீரை சுத்திகரிக்காமல் வழங்கி வருவ தாக மக்கா பாளையம் பகுதி வாக்காளர்கள் தெரிவித்தனர். இந்த வார்டில் பத்து பேர் போட்டியிடுகின்றனர்.

இலுப்பகோணம், வாழவிளை, செறு கோல், பத்மநாபபுரம் கோட்டையின் ஒருபகு தியை உள்ளடக்கியது ஏழாவது வார்டு. இங்கு சிபிஎம் தக்கலை வட்டாரக்குழு உறுப்பினர் எம்.விஷ்ணு கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வார்டில்தான் அண்மையில் கோட்டைச்சுவர் இடிந்தது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மட்டுமல்ல பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதும் மக்கள் பிரதிநிதியின் கடமை என்கிறார் விஷ்ணு. இங்குள்ள தலித் மற்றும் மீனவ மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார். பேருந்து நிலையம் முதல், முல்லை நகர், ராமன்பறம்பு பின்பகுதி, காவலர் குடி யிருப்பு, கேரள புரம் இறக்கம் வரையிலான வடக்கு பகுதியை உள்ளடக்கியது 14 ஆவது  வார்டு. அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 10 பேர் போட்டியிடும் இந்த வார்டில் மொத்த வாக்காளர்கள் 512. சிபிஎம் வேட்பாளராக வட்டாரக்கு உறுப்பி னர் சி.ரமேஷ்குமார் களத்தில் உள்ளார். சாக்கடை கால்வாயும் குடிதண்ணீர் பிரச்சனை யும் வார்டில் உள்ளது. முல்லை நகர் பகுதியில் சாக்கடை தண்ணீர் ,சாலையில் ஓடுகிறது. இதனால் சாலை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.  

குளத்தை பராமரிக்கும்  வாலிபர் சங்கம்

பேருந்து நிலையம் பின்புறம், ராமன் பறம்பு பகுதிகளை உள்ளடக்கிய 15 ஆவது வார்டில் ஏ.அனுஷா சிபிஎம் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த வார்டில் உள்ள மக்கள் குளிக்க பயன்படுத்தும் நெர்ணியா குளம், மொச்சக்குளம், பாலார் குளம், பெரு மாள் கோயில் அருகில் உள்ள குளம் ஆகியவற்றில் சாக்கடை கழிவுகள் கலந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பண்டார குளத்தை வாலிபர் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு சுத்தம் செய்து பராமரித்து வரு கிறார்கள். இதனை பாராட்டும் வாக்காளர் கள் சிபிஎம் வெற்றி பெற விருப்பம் தெரிவித்தனர். பாரதி நகர், காந்தி நகர், செட்டிவிளை பகுதி களை உள்ளடக்கிய 16 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளராக கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.சந்திரகலா போட்டியிடுகிறார். இவர் தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் கூறுகையில், கடந்த முறை சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் தருவதாகவும் தாங்கள் ஆட்சியில் உள்ளதால் சாத்தியமாகும் என்றும் வாக்குறுதி கொடுத்தனர். இன்றுவரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் இந்த நகரின் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார். தெரு விளக்கு, சாலை போன்றவற்றைக்கூட பாரம்பரிய நகரில் அமைத்து தராத அவல நிலையை போக்க வேண்டும் என்றார்.

சி.மணிகுமார் 19 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர். மொத்தம் 9 பேர் போட்டியிடுகின்ற னர். புலியூர்குறிச்சி தீயணைப்பு நிலையம் முதல் கூரியன்குளம், சந்தைவழி, அழகர் அம்மன் கோயில் தெரு, ஒற்றைத் தெரு, இரட்டைத் தெரு ஆகிய பகுதிகள் இந்த வார்டில் உள்ளன. 60 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிக்கும் இந்த வார்டு எஸ்சி ஒதுக்கீட்டில் உள்ளது. மொத்தமுள்ள 893 வாக்காளர்களில் சுமார் 500 பேர் தலித்து களாவர். இங்கு கழிவுநீர் கால்வாய் இல்லை. தெருவிளக்கு எரிவதில்லை. கழிவுநீர் கலக்கும் கூரியன் குளத்தைதான் இங்குள்ள மக்கள் குளிக்க பயன்டுத்துகின்றனர். சந்தை வழியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் மோசமான நிலையில் சாலை பழுதடைந்துள்ளது. வறீத் ஜே.ஷெரலி 17 ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். சிபிஎம் ஆதரவு பெற்ற இவரது சின்னம் கிற்றார் இசைக்கருவி. பேலஸ் ரோடு, சந்தை ரோடு, இரணியல் இறக்கம், களிப்புர முக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய குறுகிய பகுதிகளைக் கொண்டுள்ள இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் 372. நகரத்தில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சிபிஎம் ஆதரவு பெற்ற மற்றொரு வேட்பாளர் 20 ஆவது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் கே.அஜீஸ். உதயகிரி, கரும்பாறை, தென்கரையில் ஒரு பகுதி, தேவசகாயம் பிள்ளை சர்ச் பகுதி, பிரம்மபுரம் ஆகியவை இந்த வார்டில் உள்ளன. 5 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தக்கலை வட்டாரச் செயலாளர் சுஜா ஜாஸ்பின் கூறுகையில், பாரம்பரிய நகரமான பத்ம நாபபுரம் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வசதிகள் செய்யப்பட வேண்டும். இந்த நகரத்தின் வளர்ச்சியில் சிபிஎம் வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களை ஈடுபடுத்திக் கொண்ட வர்கள். அதற்காக ஏராளமான போராட் டங்களை நடத்தி வருவதை வாக்காளர்கள் நன்கு அறிவார்கள். கழிவுநீர் மேலாண்மை முக்கிய பிரச்சனை. பாதாளச் சாக்கடை போன்ற திட்டங்கள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடு இல்லாமல் திடீரென வீடு களின் கழிவுநீர் குழாய்களை நகராட்சி அதி காரிகள் மூடுவது சரியல்ல. மருத்துவமனை கழிவுகளால் பண்டாரகுளம் (செட்டிகுளம்) கடும் சுகாதார சீர்கேடுக்கு வழிவகுத்தது. இதைக் கண்டித்தும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர், வாலிபர் சங்கம் இணைந்து போராட்டம் நடத்தின. அதன் விளைவாக தற்போது இப்பிரச்சனை க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அத்தகைய நடைமுறை இதர பகுதிகளிலும் பின்பற்றி குளங்களை பாதுகாக்க வேண்டும். புதிய நகர்மன்றம் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். அதற்கு சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது அவசியம் என்றார்.

ஊழலற்ற நிர்வாகமும் சாதனைகளும்

பத்மநாபபுரம் புராதன நகராட்சியின் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டவர் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது. அவர் கூறுகையில், 1986 இல் பத்மநாபபுரம் நகராட்சிக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. வருவாய் குறைந்த நகராட்சியால் அதற்கான கடனை திருப்பி செலுத்த முடியாது என்பதால் முதல்முறையாக அரசின் மானியமும் 3 தவணைகளில் நிதியும் தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டது. ஒரு நகராட்சியின் குடிநீர் திட்டத்துக்காக அரசு மானியம் கொடுத்தது முதல் நிகழ்வாகும். ஆற்றூர் அருகில் குழித்துறை ஆற்றில் கிணறு அமைத்து மருந்துகோட்டை அருகில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடு வரை அந்த திட்டத்தில் இடம்பெற்றது. மருந்துகோட்டையில் சுத்திகரிப்பு நிலையத்துக்கான இடத்தில் குப்பை கிடங்கு செயல்படுகிறது. 30 ஆண்டுகளாக சுத்திகரிக்கப்படாத தண்ணீர்தான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தக்கலை, பத்மநாபபுரம் ஊர் வழியாக குமாரபுரம் வரையிலான அரசின் சிற்றுந்து அப்போது இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பயன்பட்ட அந்த சிற்றுந்து தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. தக்கலை பேருந்து நிலையம் நகராட்சி நிர்வாகம் சிபிஎம் கையில் இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது. நேர்மையான ஊழலற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகத்தை எங்களால் தரமுடியும் என்பதற்கு குமரி மாவட்டத்தில் கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் என பல உதாரணங்கள் உள்ளன. இதை உணர்ந்த வாக்காளர்கள் சிபிஎம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி என்றார்.