மதுரை, செப்.21- அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்திடும் ஒன்றிய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும். நாடு முழுவதும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உள்ள பல்லாயிரக் கணக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா . லெனின் தலைமையில் நடைபெற்றது . மதுரை தெற்கு - மேல மாசி வீதி சந்திப்பில் புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர் . இராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரையாற்றினார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் துணைத்தலைவர் சி . சந்திரசேகரபாரதி , தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் எஸ் . பாலசுப்பிரமணியன் , மதுரை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் என் . சுரேஷ்குமார் , மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பொருளாளர் ஏ.டி. செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் கருத்துரையாற்றினர். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவின் சார்பில் ஆர். ராதாகிருஷ்ணன், ஆர்.சுந்தரராஜன், எஸ்.ஆர்.கண்ணன், ஏ.ஆர். ஆனந்த ஜவஹர், எம்.ஜே. மனோஜ், ம.மணிமாறன், எஸ்.பரமசாமி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரித்துப் பேசினர். டி.பாண்டியராஜன் நன்றி கூறினார்.