திருச்சிராப்பள்ளி, ஏப்.21- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் 2100 கி.மீ. பிரச்சார நடைபயண நிறைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் மே 30 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் டி.சீனிவாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் அகில இந்திய முடிவுகள் குறித்து பேசினார். மே 30 அன்று திருச்சியில் நடைபெறும் சிஐடியு நடைபயண நிறைவு பேரணி, பொதுக்கூட்டம் குறித்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் வழங்குவது, பிரச்சாரம் செய்வது குறித்த திட்டமிடல் அறிக்கையை திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் முன்வைத்தார். 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் 7 முனைகளில் இருந்து மே 20-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்திக்கும் 2100 கி.மீ, பிரச்சார நடைபயணம் இறுதியாக மே 30-ந்தேதி திருச்சியில் சங்கமிக்கிறது. பின்னர் பிரச்சார நடைபயண நிறைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகில் இருந்து துவங்கும் நடைபயண நிறைவு பேரணி, புத்தூர் நால்ரோடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடையை சென்றடைகிறது. பொதுக்கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென், சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இந்த நடைபயண நிறைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வெகுசிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.