மேம்படுத்தி தர வியாபாரிகள் கோரிக்கை மதுரை, ஜன.2- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருந்த சென்ட்ரல் மார்க்கெட் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுத்தாவணி பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்த மார்க்கெட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இரவு, பகலாக இயங்கி வரும் இக்காய்கறி சந்தைக்கு தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர். இப்படி மிகவும் பரபரப்பாக செயல்பட்டுவரும் காய்கறி சந்தையில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை, உதாரணமாக காய்கறியோடு நோயையும் வாங்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இங்கு மூன்று கழிப்பறைகளில் இரண்டு கழிப்பறைகள் பயன்பாடில்லாமல் சுகாதாரக் கேடாக நோய்பரப்பும் வகையில் உள்ளது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு வருகிறது. குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. நீர்த்தொட்டி பயன்பாடில்லாமல் காட்சி பொருளாக உள்ளது.
மேலும் தற்போது பெய்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அலங்கார பொருளாக சாலையில் எரியாத மின்விளக்குகள் உள்ளது. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாத காய்கறி சந்தையாக மதுரை சென்ட்ரல் மார்க்கெட் செயல்படுகிறது என்று வியாபாரிகளும் பொதுமக்களும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தையில் சுற்றி திரியும் மாடுகளால் காய்கறிகள் விரயமாகிறது. சந்தையில் மாடுகளை நுழையவிடாமல் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சுகாதாரமான முறையில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கோரி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கனி வளாக சங்கத்தின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னமாயன் கூறுகையில், ‘‘இங்கு உள்ள சாலைகள் காய்கனி வளாகம் ஆரம்பிக்கப்பட்டபோது போடப்பட்டது. தற்போது குடிநீர் மேல்நிலை தொட்டி ஒன்று மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக குழாய் பதிப்பதற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டன. குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில் பள்ளங்கள் சரியாக மூடப்படவில்லை. இதனால் காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள் பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் மற்ற வாகனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு காய்கறிகள் இறக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதேபோல் அடிப்படை வசதிகள் இங்கு குறைவாக உள்ளது என்று தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் சரியான ஏற்பாடுகள் இல்லாத சூழ்நிலையில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் சுகாதார சீர்கேட்டில் பிடியில் உள்ளது’’ என்று கூறினார்.