districts

img

சித்திரைத் திருவிழா: மதுரையில் கோலாகலம்

மதுரை, ஏப்.15- கோவில் மாநகர் என அழைக்கப்படும், மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரைத்திருவிழா உலகப் பிரசித்திபெற்ற நிகழ்வாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில்  சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வு சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாகும். கொரோனா பரவலால், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சித்திரைத் திருவிழா, ஆயிரக்கணக்கான வியாபாரிகளுக்கு இந்தாண்டு ஒரு சிறிய ஆறுதலைத் தரும் என எதிர்பார்க்கலாம்.  வணிகர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு திருவிழாவின் போது அனைத்துத் துறைகளின் மொத்த விற்பனை பல கோடிகளைத் தாண்டும் என்கின்றனர். கொரோனா தொற்றுக்குப்பிறகு மதுரை மாநகரின் பொருளாதாரம் ‘இயல்புநிலைக்கு’ திரும்புவதற்கு” இந்த விழா ஒரு அறிகுறியாக இருக்கக்கூடும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் என்.ஜெகதீசன் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில், “தொற்றுப் பரவுவதற்கு வருவதற்கு முன்பு, சித்திரைத் திருவிழாவின் போது மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.500 கோடிக்கு வர்த்தகம் நடக்கும். பல லட்சம் மக்கள் கூடும் இந்தத் திருவிழாவில், மக்களின் தேவை அதிகரிக்கும் போது அதன் மூலம் வர்த்தகம் அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தகம் ஸ்தம்பித்தது. இரண்டு வருட இடைவெளியில் திருவிழா நடைபெறுவதால், சாதாரணத் திருவிழாக் காலங்களை ஒப்பிடும்போது, வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது வழக்கமான பண்டிகை கால வர்த்தகத்தைவிட அதிகமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். மீனாட்சி அம்மன் கோவில் அருகே கடை நடத்தி வரும் வியாபாரி சீனிவாசன், கூறுகையில், தங்கும் இடம், பூஜைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுத்துறை போன்றவற்றில் வழக்கமான திருவிழாக்காலங்களை விடக் குறைந்தபட்சம் 30 சதவீதம் விற்பனை அதிகரிக்கும்” என்றார்.

மதுரை பூ வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பூ வியாபாரி மனோகரன் கூறுகையில், “பூ வியாபாரம் வாரக்கணக்கில் சரிவைச் சந்தித்தது. தற்போது சித்திரைத் திருவிழா சற்று மூச்சுவிட வாய்ப்பளித்துள்ளது” என்றார். மேலும் அவர் கூறுகையில். “மதுரையில் பூக்களின் தேவை வெகுவாகக் குறைந்ததால், கொள்முதலைக் குறைத்தோம். பூக்கள் அறுவடை தருணத்தில் இது விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது” தற்போது தேவை அதிகரித்துள்ளது, ஆனால், தற்போது பெய்து வரும் மழையினால் மாவட்டத்திற்குப் பூக்கள் வரத்து குறைந்துள்ளதாலும், திருவிழா காரணமாகத் தேவை அதிகரித்துள்ளதாலும் விலையில் சிறிதளவு உயர்வு உள்ளது என்றார். ஆனாலும் திருவிழாவின் போது மல்லிகைப்பூ கிலோ ரூ. 500 வரை விற்கும். பூ வியாபாரிகளின் நிதி உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் சித்திரைத் திருவிழா தீர்க்காது.  கள்ளழகர் ஆடை வடிவமைப்பு கள்ளழகர் வேடமணிபவர்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் ஷேக் தாவூத் கூறுகையில், “மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பணிகளைத் தொடங்கிவிட்டோம். ஆடை தைப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களிலிருந்தும் கொள்முதல் செய்தோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆரக்கால் ஜல்லடம், முள்ளுக்கால் ஜல்லடம், குடை மற்றும் சாட்டை மிகவும் பிரபலமானவை. இங்குத் தயாரிக்கப்படும் பொருட்களை ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.  இருப்பினும், சிலர் ஒவ்வொரு ஆண்டும் புதியவற்றைப் பெற விரும்புகிறார்கள்” என்றார். “இந்த ஆடைகளை உருவாக்குபவர்கள் திறமைமிக்கத் தையற்கலைஞர்கள். கள்ளழகர் ஆடை தயாரிப்பில் மதுரை புது மண்டபம் தனித்துவமானது. இந்தத் தையல் கலைஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் பல ஆண்டுகளாக இந்தப் பணியையே செய்துவருகின்றனர்” என்றார் புது மண்டபம் வியாபாரிகள் மற்றும் தையல் கலைஞர்கள் சங்கத் தலைவர் ஜி.முத்துப்பாண்டி ஆடையை உருவாக்கும் பணியில் மும்முரமாக இருந்த கே.ராஜ்குமார் கூறுகையில், “ஆடைகளை வாங்க ஏராளமானோர் வருகின்றனர். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தாலும், பாரம்பரிய முறைகளை யாராலும் மாற்ற முடியாது”. என்றார்.

தண்ணீர் பீய்ச்சுதல்

முன்பெல்லாம் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, அழகர் வேடமணிந்து கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதை விவசாயிகள், கிராமப்புற மக்கள் நேர்த்திக்கடனாகச் செய்வார்கள். காலப்போக்கில் விவசாயம் அருகிவிட்டதால் இப்போது நகரவாசிகள், குடும்ப நலன், தொழில் வளம் பெருக நேர்த்திக் கடனாக விரதம் இருந்து, அழகர் வேடமணிந்து தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது அதிகரித்துள்ளது.  பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு அழகர் வேடமணிந்து, தண்ணீரைப் பீய்ச்சியடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  பொருட்காட்சி சித்திரைத் திருவிழா நாட்களில் தமுக்கம் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரங்குகள் அமைத்து சித்திரைப் பொருட்காட்சி நடத்தப்படும். தற்போது தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.45.5 கோடியில் வர்த்தக மையம் அமைக்கப்படுவதற்கு அங்கு போதுமான இடவசதியில்லாததால் மாநகராட்சிக்குச் சொந்தமான மாட்டுத்தாவணி அருகே உள்ள பத்து ஏக்கர் நிலத்தில் சித்திரைப் பொருட்காட்சி நடத்தச் செய்தி மக்கள் தொடர்பு துறை முடிவு செய்திருந்தனர். அதுவும் இப்போது இல்லையென்றாகிவிட்டது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாளன்றும் பூப்பல்லக்கு நாள் அன்றும் லட்சக்கணக்கானோர் பொருட்காட்சியைச் சுற்றிப்பார்த்துவிட்டு டோடோரா, ஜெயின்ட்வீல், ரயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் தங்களது பிள்ளைகளை ஏற்றி மகிழ்வர். குறிப்பாகப் பொருட்காட்சியில் விற்கப்படும் டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி ஆகியவற்றைச் சிறுவர்கள் விரும்பி வாங்கிச் சாப்பிடுவர். சித்திரைப்பொருட்காட்சி மூலம் அரசின் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்வது மட்டுமல்ல; அரசுக்குப் பலகோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதற்கு இந்தாண்டு வழியில்லாமல் போய்விட்டது. 

ஜவ்வு மிட்டாய்

‘மிட்டாய்’ சாப்பிட்ட பிறகு   ‘இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சிறுவருக்கோ, சிறுமிக்கோ நாக்கின்’ நிறம் மாறிருந்தால். அந்தச் சிறுவர் குடும்பம் சித்திரைத்திருவிழாவிற்கு சென்று வந்துள்ளது எனச் சட்டெனக் கண்டுபிடித்துவிடலாம். மூன்று தலை முறைகளாக மிட்டாய் வியாபாரம் செய்துவரும் மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த எம்,நாகராஜன் (37) கூறுகையில் என் தாத்தா பலவேச நாடார் தொடங்கி மூன்று தலைமுறையாக மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறேன். தொலைக்காட்சிகள் திருவிழாவில் கடவுள்களைக் காட்டியபின் கேமிராவை எங்களை நோக்கித் தான் திருப்புகின்றன. இது மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது. மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சித்திரைத் திருவிழா, இந்த பாரம்பரிய மிட்டாய் விற்பனையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது, மிட்டாய் வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எங்களிடம் மிட்டாய் வாங்க வரிசையில் காத்திருக்கின்றனர். ‘மிட்டாய்’ அச்சு வெல்லம் அல்லது வெல்லம் மற்றும் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மிட்டாய் தயாரிக்க 30 நிமிடங்கள் ஆகும்.  பச்சை நிறம், பழுப்பு நிறம்,  இளஞ்சிவப்பு நிறம் என மூன்று வகையான ‘மிட்டாய்கள்’ தயாரிக்கிறோம். மிட்டாய் ஒன்றின் விலை ஒரு ரூபாய் தான்.  திருவிழாவில் சுமார் 20 ஆயிரம் மிட்டாய்கள் வரை விற்பனைக்குக் கொண்டுசெல்வதாகக் கூறுகிறார் நாகராஜன். பாரம்பரிய மிட்டாய் விற்பனை செய்து வந்த பலர் திருமணமான பிறகு மிட்டாய் விற்கச் சங்கடப்படுகின்றனர் என்றார்.

படங்கள்: ஜென்னி, பொன்மாறன்

 

ஆட்டுத்தோலில் உருவான தோப்பறை

காரியாபட்டி, ஏப்.15- கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பயன்படும் தோல் பைகள் தயாரிக்கும் பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக  ஈடுபட்டுவருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 1000 முதல் 2000 ஆட்டு தோல் பைகள் தயார் செய்து மதுரை சித்திரை திருவிழா விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர். சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கு முன்பு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஆட்டுத் தோலை சேகரித்து ரோமங்களை அகற்றி பதப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.  தோல் பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வியாபாரி மாரிமுத்து கூறியதாவது, *சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ஆட்டுத்தோல் பைகள் தமிழ்நாட்டிலேயே காரியாபட்டி பகுதியில் மட்டும் தான் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் இத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருகிறோம். கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட முடியாமல் போனதால் சுமார் ரூ .3 முதல் ரூ.4 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது, தற்போது திருவிழா நடைபெறுவதால் நாங்கள்  மகிழ்ச்சியாக இருக்கிறோம். என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “மீதம் தேங்கும் தோல்களை பதப்படுத்தி வைப்பதற்கு கிட்டங்கி அமைத்துத் தரவேண்டும்,. தோப்பறை தொழிலாளர்களை ஒன்றிணைந்து தோப்பறை தொழிலாளர்கள் சங்கம் உருவாக்கி அதை நலவாரியத்தில் இணைக்க வேண்டும் என்றார்.  தொழிலாளி சாமாயி கூறுகையில், “ மூன்று மாதங்களாக கடன் வாங்கி வேலை செய்தோம்.  பாரம்பரியமாக எங்கள் பாட்டன் காலத்தில் இருந்து வாடிக்கையாக தோல் தொழில் செய்து கொள்கிறோம். குடும்பமே இந்தத் தொழில் தான் செய்து வருகிறது.  ஒரு தோல் பை விற்றால் 100 ரூபாய் கிடைக்கும் அதற்கு மூன்று மாதங்களாக உழைக்கிறோம். இரண்டு வருடமாக திருவிழா நடைபெறாததால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை தமிழக அரசு சித்திரை திருவிழாவுக்கு அனுமதி கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

- ஜெயக்குமார், விருதுநகர்

 

மக்களுக்கு நீரமோர் வழங்கிய சிபிஎம் - மாதர் சங்கம்

மதுரையில் அனைத்துத்தரப்பு மக்களும் பெருந்திரளாக பங்கேற்று சித்திரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு வரும் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மத்திய இரண்டாம் பகுதிக்குழு சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் சிங்காரம்  தலைமை வகித்தார். மேலமாசி வீதி -வடக்கு மாசி வீதி சந்திப்பில் தேரோட்டத்தை காண வந்த மக்களுக்கு கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினர் இரா. விஜயராஜன், மதுரை துணை மேயர் தி. நாகராஜன்,  பகுதிக்குழு செயலாளர் பி.ஜீவா,  பகுதிக்குழு  உறுப்பினர்கள்  இ. உதயநாதன், பி.கோபிநாத் ஆகியோர் நீர் மோர் வழங்கினர்.

 

சித்திரை திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் கோரிப்பாளையம் கிளை சார்பில் நரிமேடு மார்க்கெட் அருகில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு  உறுப்பினர் ராவியத்துல் பசரியா தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள்,சங்க மாவட்டச் செயலாளர் ஆர். சசிகலா, பொருளாளர் ஆர். லதா ,மகேஸ்வரி உள்ளிட்டோர் மக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.