தருமபுரி, டிச.1- இலக்கியம்பட்டி பஞ்சாயத்து பூங்கா நகரில் அரைகுறை யாய் அமைக்கப்படும் சாக்கடை கால்வாய் பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முழுமையான சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பூங்கா நகர் ஈஸ்வரன் கோயில் தெருவில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்பொழுது தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஈஸ்வரன் கோயில் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த தெரு முழுவதும் சாக்கடை கால்வாய் அமைக்காமல் பாதி தெரு வரை மட்டுமே பணி நடைபெறுகிறது. இதனால் தெருவில் வசிக்கும் பொது மக்கள், தெரு முழுவதும் கால்வாய் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இதனைய டுத்து பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். பின்னர் உரிய முறையில் சாக்கடை கால்வாய் அமைத்து தருவதாக உறுதி அளித்த னர்.