districts

அநியாய மின் கட்டண உயர்வை திரும்பப்பெறுக! செப்.18 புதுவையில் முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரி,செப்.10- புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் அநியாய மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி செப்டம்பர் 18 அன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.

கோவா இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவால் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக  மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால் ஏழை எளிய, நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவர்.எனவே கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

 இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 10 செவ்வாய்க்கிழமையன்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, சிபிஎம் மாநிலச் செயலாளர் இரா. ராஜாங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், விசிக முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்தியா கூட்டணிக்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 18 ஆம் தேதி புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது”என்று தெரிவித்தனர்.