புதுச்சேரி, மே 21- புதுவையில் ஊசி மருந்து பாட்டில்களில் பல்லி மிட்டாய் விற்பனை செய்யப்படுவதால் பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்களை பெரிதும் கவர்ந்த மிட்டாய்கள் பல வண்ணங்களில், வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பல்லி மிட்டாய் என சிறுவர்களால் அழைக்கப்படும் மிட்டாய்கள் கண்ணாடி குப்பியில் அடைத்து விற்கப்படுகிறது. இந்த குப்பிகள் ஊசி மருந்துக்கு பயன்படுத்தப்படும் 10 மி.லி. குப்பிகள் என தெரிகிறது. இந்த குப்பியில் எந்த பெயரும் கிடையாது. ஏற்கனவே மருந்து பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்பட்ட குப்பிகள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த மிட்டாய்களை எடுத்துவிட்டு நுகர்ந்து பார்த்தால் குப்பியில் மருந்து வாசனை அடிப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். கோடை விடுமுறை காலம் என்பதால் சிறுவர்கள் இந்த பாட்டில் மிட்டாய்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த மருந்துக்காக பயன்படுத்தப்பட்ட குப்பியோ? இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமோ? என அஞ்சுகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.