புதுச்சேரி,ஜன.12- பால் விலை உயர்வு வலி தரக்கூடியது தான் என்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி யுள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வியாழனன்று பொங்கல் பண்டிகையொட்டி நடைபெற்ற விழாவிற்கு, பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பால் விலை உயர்வு இது வலி தரக்கூடியதுதான். நமக்கே ஒப்புதல் இல்லாமல் நிர்வாகத்தில் சில நிகழ்வுகள் நடைபெறும் .பால் விலை உயர்தியதில் எனக்கும் வருத்தம் தான். பொதுமக்களோடு எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகம் விலை உயர்வை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. பாண்லே நிறுவனத்தை அழைத்து கூட்டம் போட்டிருந்தோம். புதுச்சேரி மாநிலத்தில் இருந்தே பொதுமக்களிடமிருந்தும் பால் முகவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் அளவிற்கு புதுச்சேரி பால் உற்பத்தியில் தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த முயற்சிக்கு பிறகு விலை ஏற்றக்கூடாது என்பது எனது கோரிக்கை. எல்லா தாய்மார்களோடு நானும் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்றார். புதுச்சேரியில் ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்து பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எந்த ஒரு கோப்பும் துணை நிலை ஆளுநருக்கு தெரியாமலும், அவரது ஒப்புதல் இன்றி அமலுக்கு வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.