திருவள்ளூர், ஜன. 24- கூட்டுறவுத்துறையில் பணியை நிரந்தரமாக்க ரூ.1 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி வருவதாக அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (44). இவர் திருவள்ளூர் கூட்டுறவு துறையில் கணினியின் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே கூட்டுறவுத்துறையில் நிரந்தரமாக்கி பணி வழங்க கடம்பத்தூர், கசவநல்லாத்தூர் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரமேஷ் என்பவரை அணுகியுள்ளார். அப்போது ரமேஷ் ரூ. 4 லட்சம் பணம் கொடுத்தால் கூட்டுறவுத்துறையில் நிரந்தர மாக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பி கடந்த 2019 மே மாதம் ரூ. 1 லட்சம் முன்பணமாக கொடுத்து உள்ளார். ஆனால் இதுவரை கூட்டுறவுத்துறையில் பணியையும் நிரந்தரம் செய்யாமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஈஸ்வரன் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.