districts

img

காவலர் தாக்குதல்:  வாலிபர் நூதன போராட்டம்

திருவள்ளூர் அக். 8- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள எளாவூர் ஒருங்கி ணைந்த சோதனை சாவடி மார்க்கமாக ஆந்திரா, ஒரிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகம் வந்து செல்கின்றன. இந்த வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். தமிழ் தெரியாது என்பதால் வழிகாட்டும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் ஏறிச் செல்லும் அந்த தொழிலாளர்கள் உரிய இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். இதற்காக வாகன ஓட்டிகளிடம் ஊதியமாக 50 முதல் 100 ரூபாய் வரை பெறுகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று (அக்.8) சோதனை சாவடி அருகே நின்று கொண்டிருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த ஆப்ரகாம் (45) என்ற வழிகாட்டி தொழிலாளியை அங்கு பணியில் இருந்த காவலர்கள் இருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரிடமிருந்து பணத்தையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான அவர் அப்பகுதியில் இருந்த கோபுர மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது, தன்னை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் அந்த தொழிலாளியை கீழே இறங்கி வருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார்.