திருவள்ளூர்,ஜன.3- பெத்திக்குப்பம் ஊராட்சியில் மக்கள் நலப்பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர் நூதன முறையில் மனு அளித்தார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பெத்திக்குப்பம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் கூட முறையாக நடத்தப்படுவ தில்லை. கூட்டத்திற்கு வராத உறுப்பி னர்களிடம் அவர்களின் வீட்டிற்கே சென்று கையெழுத்து பெறும் முறையற்ற பழக்கம் உள்ளது. மேலும் விவாதங்கள் இன்றியே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டினார். கொசு மருந்து அடிப்பது, பிளிச்சிங் பவுடர் தெளிக்கும் நடைமுறையை முறையாக பின்பற்றவேண்டும். தூய்மைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், கட்டி முடிக்கப்பட்டு 5 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள ஆரம்ப பள்ளியை திறக்க வேண்டும், 4 வது வார்டில் உள்ள சுடுகாட்டை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட கால மாக வலியுறுத்தி வந்த நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட குழு உறுப்பினரும், பெத்திக்குப்பம் ஊராட்சி மன்றத்தை சேர்ந்த 4வது வார்டு உறுப்பினருமான ப.லோக நாதன் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயிலில் தலைகீழாக நின்று மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக்கொண்ட பிடிஒ வாசுதேவன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அவருடன் சிபிஎம் வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன்,வட்ட குழு உறுப்பி னர் கே.குப்பன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆ.டிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.