districts

பெத்திக்குப்பம் ஊராட்சியில் நிர்வாக முறைகேடு ஆட்சியர் தலையிடக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூன் 11- பெத்திக்குப்பம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் நடைபெறும் முறை கேட்டுகளுக்கு துணை போகும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து சிபிஎம் சார்பில் திங்களன்று (ஜூன் 10) சாமி ரெட்டி கண்டிகையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முறைகேட்டிற்கு துணை போகும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

பெத்திக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் வடிக்கால்வாயிலும்,  பெத்திக்குப்பம் ஏரி கால்வாயில் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த  ஊராட்சியில் 1200 பயனாளிகள் இருக்கும் போது வாரத்திற்கு வெறும் 50 பேருக்கு மட்டும் நூறு நாள் வேலை கொடுக்கப்படுகிறது, இந்த நிலையை மாற்றி நூறு நாள் வேலையை அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

பெத்திக்குப்பம் ஊராட்சியை கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அரசு அறிவிக்கும் எந்த திட்டத்தையும் வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனநாயக பூர்வமாக விவாதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்தும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் ப.லோகநாதன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வாலிபர் சங்கத்தின் பகுதி செயலாளர் முனிரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.