திருச்சிராப்பள்ளி, மே 22- திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் 56-ஆவது கல்லூரி தின விழா சனிக்கி ழமையன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பால் தயாபரன் தலைமை தாங்கினார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன், திருச்சி, தஞ்சை மண்டல பேராயர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய அரசு பல்கலை., மானியக்குழு தற்போது ஒரு தேர்வை கொண்டு வந்துள்ளனர். அதில் கூட ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டும்தான் எழுத முடியும் என்று கூறுகிறார்கள். எல்லா மொழியும் ஒன்று தான் என்றால், எதற்கு இரண்டு மொழி மட்டும் வைத்திருக்கிறார்கள்?. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அதில் உள்ள தேவையில்லாத சிலவற்றை நீக்கிவிட்டு நாங்கள் மாநில கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு வகுப்போம் என்றார்.