districts

குத்தகை நிலுவைத் தொகை ரூ. 12 கோடி வழங்காத தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு சீல்

தஞ்சாவூர், டிச.27 -  தஞ்சையில் பல ஆண்டுகளாக குத்தகை நிலுவைத் தொகை ரூ.12 கோடி வழங்காத தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் இந்த நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். தஞ்சையில் கடந்த 1994 ஆம் ஆண்டு 8 ஆவது உலகத் தமிழ் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது தஞ்சையில் போதுமான நட்சத்திர ஹோட்டல் இல்லாத காரணத்தினால், மாவட்ட நிர்வாகம் சார்பாக தனியார் விடுதிகள் கட்டுவதற்கு சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில் கடந்த 7.6.1994 அன்று தஞ்சை மணிமண்டபம் அருகே அரசு நிலத்தில் 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் செல்வராஜ் என்பவருக்கு விடுதி கட்ட அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது வரை இந்த நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசு அனுமதியின்றி அந்த ஒப்பந்தத்தை வெங்கடாச்சலம் என்பவருக்கு செல்வராஜ் மாற்றியுள்ளார். மேலும் ரூ.12 கோடி குத்தகை நிலுவை தொகையும் இருந்து வந்தது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும், இடத்தை ஒப்படைக்குமாறு வருவாய்துறை சார்பில் நீதிமன்றம் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காததால், திங்கட்கிழமை அதிகாலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உட்பட 100-க்கும் அதிகமான காவல்துறையினருடன் நட்சத்திர ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இங்கு 10-க்கும் மேற்பட்ட அறைகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஹோட்டல் டெம்பிள் டவர் நட்சத்திர ஹோட்டல் சீல் வைக்கப்பட்டது குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “30 ஆண்டு குத்தகை என்ற அடிப்படையில் செல்வராஜ் என்பவருக்கு நகரின் முக்கிய பகுதியில் 1 ஏக்கர் 6160 சதுர அடி அளவில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் கொடுக்கப்பட்டது. அவர் அதில் மூன்று நட்சத்திர ஓட்டல் கட்டியுள்ளார். இங்கு அறைகள், ரெஸ்டாரன்ட், மதுபான பார் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில் செல்வராஜ் குறிப்பிட்ட தேதியில் குத்தகை பணம் செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதுவரை அவர் ரூ.12 கோடிக்கு குத்தகை பணம் பாக்கி வைத்துள்ளார்.

 மேலும், குத்தகை விதிமுறைகளை மீறி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் வெங்கடாச்சலம், குமார் ஆகியோருக்கு இந்நிறுவனத்தை உள் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை இருக்கும்.  இவ்வளவு விலை உயர்ந்த இடத்தில் விதிமுறைகளை மீறி வேறு நபர்களுக்கு உள் வாடகை கொடுத்தும், குத்தகை பணத்தையும் முறையாக செலுத்தாமலும் செல்வராஜ் இருந்து வந்தார். இதுகுறித்து பலமுறை கேட்கப்பட்டும், நோட்டீஸ் அனுப்பியும் சரியான பதில் இல்லை.  எனவே டெம்பிள் டவர் ஹோட்டலுக்கு காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் முன்பதிவு செய்த அறைக்கான பணம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குத்தகை உரிமையாளர், நிலுவைப் பணமான ரூ.12 கோடி செலுத்தினால் அரசு உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.