மயிலாடுதுறை, அக்.27 - மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராபியா நர்கீஸ்பானு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி கார்த்திக், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மாணவ-மாணவிகள் 70 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தாமரை நங்கை நன்றி கூறினார்.