தஞ்சாவூர், ஜன.11 - தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக அரிய கையெழுத்து சுவடித்துறையில் தாள்சுவடிகளையும், காலத்தால் பழமையான அச்சு நூல்களையும் மரபுசார்ந்த முறையில் பாதுகாக்கும் மரபுசார் பாதுகாப்பு ஆய்வகத்தை திங்களன்று, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு வந்தவர்களை அரிய கையெழுத்துச் சுவடித்துறைத் தலைவர் முனைவர் த.கண்ணன் வரவேற்றார். ஆய்வகத்தின் செயற்திட்டங்களை அரிய கையெழுத்துச் சுவடித்துறை இணைப் பேராசிரியர் த.ஆதித்தன் எடுத்துரைத்தார். ஆய்வகத்தைத் திறந்து வைத்து தலைமையுரையாற்றிய துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பேசுகையில், “தமிழ்ப் பல்கலைக்கழகம், தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் வருகையை எதிர்நோக்கி செயற்பட தொடங்கியுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை சீர்தூக்கி மதிப்பெண் வழங்கும் தேசியத் தர மதிப்பீட்டுக் குழு, ஆய்வகம் என்ற பொருண்மையில் அளிக்கும் நன்மதிப்பைப் பெறும் வகையில் இவ்வாய்கம் செயல்படும். தமிழ்ப் பல்கலைக்கழக அரிய கையெழுத்து சுவடித்துறையில் உள்ள கையெழுத்துச் சுவடிகளும், பல்கலைக்கழகப் பொது நூலகத்தில் உள்ள காலத்தால் பழமையான நூல்களும் இந்த ஆய்வகத்தின் வழியாக பாதுகாக்கப்படும்” என்றார். பதிவாளர்(பொ) முனைவர் க.சங்கர், இவ்வாய்வகப் பணியின் வழியாக தமிழ்மரபில் உள்ள மரபுசார்ந்த பாதுகாப்பு முறைகளுக்கான காப்புரிமை பெறுவதற்கு ஆவன செய்யப்படும்” என்றார். சிறப்புரையாற்றிய சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் மேனாள் சுவடிக்காப்பாளர் முனைவர் ப.பெருமாள், “உலகெங்கிலும் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அரிய தாள் ஆவணங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ள இவ்வாய்வகம் உலகத் தரத்தில் மேம்படுவதற்குரியனவாக உள்ளது” என்றார். ஆய்வகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து ஆவணப் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் இணைய வழியாகத் தொடங்கியது. முனைவர் பட்ட ஆய்வாளர் பெருமாள் சரவணகுமார் நன்றி கூறினார்.