திருச்சிராப்பள்ளி, மே 13- திருச்சி முக்கொம்பு அணையில் ரூ.16 கோடியில் நடந்துவரும் முழு சீரமைப்புப் பணிகள் 4 மாதங்களைக் கடந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திருச்சி மாவட்டத்தில் எலமனூர் மற்றும் வாத்தலை இடையே முக்கொம்பு தடுப்பணை அமைந்துள்ளது, இங்கிருந்து தான் காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆறு பிரிகிறது. காவிரியின் குறுக்கே 594.30 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்கும் பணிகள், 1974 ஆம் ஆண்டு தொடங்கி 1977 வரை 3 ஆண்டுகள் நடந்து, அணை கட்டி முடிக்கப்பட்டது. அதிகபட்சமாக 1,80,000 கனஅடி நீரை வெளியேற்றும் வகையில் அணையின் மதகுகள் மற்றும் ஷட்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் சிறு சிறு பழுதுநீக்கம் செய்யப்படுவதுடன் வழக்கமான பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்து வந்தன. ஷட்டர்கள் ஒவ்வொன்றும் 12 மீட்டர் அகலம் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஷட்டரில் உள்ள (ரோலர்) சக்கரங்கள் மேலே தூக்கும்போது அல்லது கீழே இறக்கும் போது அடிக்கடி அடிபட்டு, அவற்றை இயக்குவது கடினமாகிறது. சில கான்கிரீட் தூண்களும்,ஷட்டர்களை தாங்கும் சங்கிலி மற்றும் ரப்பர் சீல்களும் சேதமடைந்தன. இந்நிலையில் மொத்த 41 ஷட்டர்களையும் ரூ. 16 கோடியில் முழுவதுமாக சீரமைக்க பொதுப் பணித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் ஜனவரி மாதம் தொடங்கியது. மொத்தம் 6 ஒப்பந்தக்குழுக்கள் இதற்கான பணிகளை இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றன. 60-க்கும் மேற்பட்ட நபர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஷட்டர்களில் உள்ள அனைத்துப் பழுதுகளும் சீராக்கப்பட்டு வருகின்றன. தடுப்பணையின் முக்கியத்துவம் மற்றும் கிராண்ட் அணைக்கட்டுக்கு கீழே பாயும் வெள்ளப்பெருக்கை ஒழுங்கு படுத்துவதன் மூலம், ஷட்டர்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து சுமார் 4 மாதங்களைக் கடந்து நடைபெற்று வரும் இப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டுயுள்ளது. ஜூன் மாதம் காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்பு அனைத்துப் பணிகளும் முடிந்து அணை தயார் நிலையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம் ஆற்றில் 1836 ஆம் ஆண்டு கீழணை (நீரொழுங்கி) கட்டப்பட்டது. இதில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக, 8 மதகுகள் உடைந்து சேதமடைந்தன. அதன்பிறகு அப்போதைய அதிமுக அரசு ரூ.414 கோடி மதிப்பீட்டல் அருகிலேயே புதிதாக பாலத்துடன் கூடிய கதவணை கட்ட நிதி ஒதுக்கியது. பணிகள் நடந்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து நிகழாண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம், அந்த அணை மற்றும் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.