தஞ்சாவூர், ஏப்.10- அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு விதை கரும்புகளை வேளாண்மைத்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். அப்போது தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில், வீரமாங்குடி பகுதியைச் சேர்ந்த அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ராவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம் வீரமாங்குடி பகுதியில் தயாரிக்கப்படும் அச்சுவெல்லத்துக்கு தமிழக அரசு புவிசார் குறியீடு பெறும் முயற்சியை விவசாயிகள் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம். அச்சுவெல்லம் தயாரிக்க பயன்படும் விதை கரும்பு பயிரிட விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே வேளாண்மைத்துறை மூலம் விதை கரும்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரமாங்குடி பகுதியில் அச்சுவெல்லம் இருப்பு வைக்க குடோன் வசதியும், விற்பனை செய்ய ஏதுவாக சந்தை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். வீரமாங்குடி அச்சுவெல்லத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் லட்டு, பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்த முன் வர வேண்டும்’’ என கூறியுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கூடுதல் ஆட்சியர், கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.