districts

மாணவி தற்கொலை வழக்கில் விடுதிக் காப்பாளருக்கு ஜாமீன்

தஞ்சாவூர், பிப்.8 - மாணவி லாவண்யா தற்கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளருக்குத் தஞ்சாவூர் நீதி மன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில்  12 ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17)  விஷம் குடித்து தற்கொலை செய்து  கொண்டார்.  இதுகுறித்து, திருக்காட்டுப் பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து  லாவண்யாவை அதிக வேலை வாங்கி மன  உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக்  காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் எனப் பெற்றோர் புகார் எழுப்பினர்.  இதுதொடர்பாக சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் லாவண்யாவின் தந்தை முருகானந்தம் வழக்குத் தொடுத்தார்.  விசாரணையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் உள்ள விடுதிக் காப்பாளர் சார்பில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, தஞ்சையில் உள்ள நீதிமன்றத்தில் விண்ணப் பித்து தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்திருந்தார்.  இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார். இதன் மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசா ரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூத னன் ஜாமீன் வழங்கினார்.

முன்ஜாமீன்
இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல் மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலை யில், அவர் முன் ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து ராக்கேல்மேரிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

;