சென்னை, பிப். 6- ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணலியில் உரத் தொழிற்சாலை முன்பு ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணலியில் ஒன்றிய அரசுக்கு சொந்த மான உரத்தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த அளவு ஓய்வூதியம் வழங்கப்படு வதாக தெரிகிறது. ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும், மருத்துவ பயன்களை வழங்கக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் இவர்களுக்கு ஓய்வூதிய தொகை, மருத்துவ பயன்கள் வழங்கப்பட வில்லை. இதை கண்டித்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மணலி எம்எப்எல் தொழிற்சாலை வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி காவல் துறையினர், நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.