districts

img

குடியிருப்புகளை மறித்து சுவர்: ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் எதிர்ப்பு

சிதம்பரம், ஏப். 1- சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட 33ஆவது வார்டு இந்திரா நகர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடுமபத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் நிலையத்தின் அருகே செல்லும் வழியைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ரயில் நிலையத்தின் வழியாகச் செல்வதற்கு தடைவிதித்து சுற்றுச் சுவர் அமைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 33ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத் தலைவருமான முத்துகுமரன், அப்பகுதி மக்களுடன் சென்று திருச்சி ரயில்வே மண்டல மேலாளரைச் சந்தித்தார். அப்போது, பொதுமக்கள் சென்றுவர மனிதாபிமான முறையில் வழிவிட வேண்டும் என்று கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் கோட்டாட்சியருக்கும் கடிதம் அளித்துள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று (ஏப். 1) ரயில்வே நிர்வாகம் சுற்றுசுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் தலைமையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியைத் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மக்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிமாக பணிகள் நிறுத்தப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் 5 அடி இடம் அளிக்க வேண்டும் என்று முத்துகுமரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.