districts

876 பேர் பலி: 1,792 நபர்களுக்கு கொரோனா இழப்பீடு கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சி அம்பலம்!

கடலூர், ஜன. 4- உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பல்வேறு வகையில் உருமாறிக் கொண்டே வருகிறது. இந்த கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டு லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் இறந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 36,700 பேர் இறந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு இதுவரையில் 876 பேர் இறந்து ள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கொரோனாவினால் இறந்தவர்களின் குடும்பத்தினற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அதற்கான விண்ணப்பங்கள் இணையம் மற்றும் நேரடியாக அரசால் பெறப்பட்டு வருகிறது.  இதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் டிச.31 ஆம் தேதி வரை இழப்பீடு கோரி 1,792 பேரின் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் 1,390 விண்ணப்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13 விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 27 மனுக்களில் வாரிசு மற்றும் சட்டப்பிரச்சினை உள்ளதால் இழப்பீடு வழங்க இயலாத நிலை உள்ளது.  66 மனுக்களில் முகவரி முழுமையாக இல்லாத காரணத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலவில்லை. 20 மனுவில் உள்ள தகவல்கள் (தொலைபேசி எண் மற்றும் முகவரி) முழுமையாக இல்லாத காரணத்தினால் பரிசீலனை செய்ய இயலவில்லை. எஞ்சிய மனுக்களில் மருத்துவ ஆவணங்கள் முழுமையாக இல்லை. இவை சரிபார்ப்பிற்கு கடலூர் மருத்துவ இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பத்தை, மீண்டும் முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா இறப்பே 876 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 1,792 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதும், அதில், 1,390 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.6.95 கோடி வழங்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதலாக 514 பேருக்கு ரூ.2.57 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மேலும், 113 விண்ணப்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டி உள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் 876 பேர் மட்டுமே கொரோனாவினால் இறந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்தன் மூலம் கொரோனா இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டியிருக்கிறார்களா?. அல்லது கூடுதலான நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா?. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியத்திடம் கேட்ட போது, கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் வேறு மாவட்டங்கள், வேறு மாநிலங்களில் சிகிச்சை பெற்று பலியாகி இருந்தாலும் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வேறு மாவட்டங்கள், வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்களின் பட்டியலும் கடலூர் மாவட்ட இறப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டு வந்தது தொடர்பாக எழுப்பிய எழுப்பிய வினாவுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, கொரோனா இறப்பு குறித்தும், வழங்கப்பட்ட இழப்பீடு குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.