புதுச்சேரி, மே 15-
புதுச்சேரியில் தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த மின் துறைக்குச் சொந்தமான இடம், காவல் துறையினர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலு வலகத்திற்கு பின்புறம் மின் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் தனியார் ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து அங்கு சென்ற மின் துறை அதிகாரிகள் சுற்றுச்சுவர் அமைத்து மின் துறைக்கான இடம் என அறிவிப்புப் பலகை வைத்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன் திடீரென மின் துறை கட்டிய சுற்றுச்சுவரில் குறிப்பிட்ட பகுதியை மர்ம கும்பல் இடித்ததுடன், இரும்புக் கதவு போட்டு பூட்டியுள்ளனர்.
அரசு நிலம் என அறிந்தும் ஆக்கிரமிப்பு கும்பல் தனியாகப் பூட்டுப் போட்டதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். இதையடுத்து பெரியகடை காவல் நிலையத்தில் மின் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் திங்களன்று (மே 15) மின் துறைக்குச் சொந்தமான இடத்தில் தனியார் பூட்டு இருந்ததை அகற்றிவிட்டு அதை மீண்டும் மின்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒப்படைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படும் எனவும் காவல் துறையினர் கூறினர். தற்போது அவ்விடத்தில் சுற்றுச்சுவர், இரும்புக் கதவு அகற்றப்பட்டு, இது மின் துறைக்கு சொந்தமான இடம் என மீண்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.